Saturday, February 06, 2010

இவர்களுக்கும் ஒரு கனவு இருந்திருக்கும்...

அன்மையில் பெங்களூரிலிருந்து நெல்லை செல்லும்போது, வழியில் சாப்பிடுவதற்கு நல்ல ஒரு சாலையோர கையேந்தி பவனைத் தேடிக் கடைசியில் திண்டுக்கல்-மதுரை நெடுஞ்சாலையில் ஒரு கடையைக் கண்டு பிடித்தோம். சாலையேரத்தில் சின்னதாகக் கூரை வேயப்பட்டு இரண்டு பேர் மட்டுமே அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர். ஒரு இளைஞன் தோசைக்கல்லில் தோசையும், ரொட்டியும் போட்டுக் கொண்டிருந்தான். ஒரு வயதானவர் எல்லாருக்கும் பறிமாறிக் கொண்டிருந்தார். அழுக்கு வேட்டி, காக்கி சட்டை, கலைந்த தலை ஒட்டிய கண்ணங்கள் என காலம் அவரை அலைக்கழித்திருந்தது. எல்லாருக்கும் ஓடி ஒடிச் சென்று பரிமாறினார். அதில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை. சாப்பிட்டு முடித்ததும் நானும், எனது மைத்துனரும் அவருக்கு தலா பத்து ரூபாய் கொடுத்தோம். மிகவும் சந்தோசத்துடன் அதை வாங்கி பக்கத்தில் இருந்த கடையில் போய் பீடி வாங்கி பற்ற வைத்துக் கொண்டார். அவருக்கு மாத சம்பளம் சாப்பாட்டோடு சேர்த்து 500 ரூபாயாக இருக்கலாம். நகரத்தாருக்கு ஒரு வேளை ஒரு பெரிய உணவகத்தில் சாப்பிட ஆகும் செலவு... தினமும் எங்களைப் போல யாராவது சேவைப் படி குடுப்பார்களா? அவருக்கென ஒரு குடும்பம் இருக்குமா? இந்த தள்ளாத வயதில் அவர் வேலை செய்ய அவரைத் தள்ளிய சூழல் எது??????

திருநெல்வேலி பதிவுத்துறை அலுவலகத்துக்கு ஒரு வேலை நிமித்தம் சென்றிருந்தேன். சொத்தைப் பதிவு செய்ய, பாகப்பிரிவினை செய்ய, திருமணப் பதிவு செய்ய எனக் கூட்டமாய் மக்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். நிதி நிலையில் பின் தங்கிய அரசு அலுவலர்கள் தங்கள் பதவியின் தரத்துக்கேற்ப மக்களிடம் அவர்கள் இரத்தம் வேர்வை சிந்தி உழைத்த சிவப்பு பணத்தை ஒரு கையெழுத்துக்காக யாசித்துக் கொண்டிருந்தனர். இரண்டு புதுக் கார்களில் வந்து இறங்கிய மென்பொருள் இளவட்டங்கள், டென்வரில் சம்மர், ஆட்டம் விண்ட்டர் எப்படி இருக்கும் என பெருமையடித்துக் கொண்டிருந்தது. அந்த நேரம் ஒரு ஐம்பது வயது அம்மா பெரிய பையைத் தூக்கிக் கொண்டு எங்களிடம் வந்தார். பை நிறைய சீடை, முறுக்கு, காரச்சேவு அடுக்கி இருந்தது. "நல்லாருக்கும்யா, வீட்ல செஞ்சது ஒரு பாக்கெட்டாவது வாங்கிக்கோங்களேன்" என்றாள். எனது உடனிருந்தவர் "போய்ட்டு அப்புறமா வாங்கம்மா, நாங்களே காலையில் இருந்து காத்துக் கிடக்கோம்" என்றார். உடனே அந்த பெண்மனி எங்கள் அருகில் இருந்தவர்களிடம் சென்று விட்டாள். ஒரு திருமணப் பதிவு செய்ய மூன்று மணி நேரமும், ரூபாய் 700ம் ஆனது (பதிவுக்கு வெறும் 120 ரூபாய் தான்). மீண்டும் கிளம்புகையில் அதே பெண் எங்களிடம் வந்து ஏதாவது வாங்குமாறு கேட்டாள். ஒரு கையெழுதுக்காக 550 கொடுக்கும் போது இந்த பெண்ணிடம் ஒரு 50 ரூபாய்க்காவது வாங்க வேண்டும் என்று தோன்றியது. எங்களிடம் விற்று விட்டு அந்த "டென்வர்" பார்ட்டியிடம் அந்த அம்மா சென்றார். "இதெல்லாம் ஒன்னும் வேண்டாம் எடத்தக் காலி பண்ணும்மா" என்னும் பதில் வந்தது. அதை சட்டை செய்யாமல் எப்படியாவது அவர்களிடம் ஒரு பாக்கெட்டாவது விற்பதற்கு அந்த அம்மா முயற்சி செய்து கொண்டிருந்தாள்...

தமிழக அரசு தொலைக்காட்சி பெட்டி, சமையல் எரிவாயு, மளிகைச் சாமான்கள் என எல்லாம் இலவசமாகக் கொடுத்து வரும் காலத்திலும் தங்கள் உடல் உழைப்பையே நம்பி இருக்கும் இவர்களைப் போன்றவர்களை என்ன சொல்வது... இவர்களுக்கும் ஒரு கனவு, ஒரு நம்பிக்கை என்றோ இருந்திருக்கும். காலமும் வாழ்க்கையும் நடத்திய சுழற்சி விளையாட்டில் சிக்கி அந்தக் கனவுகள் காணாமல் போயிருக்கும், அன்றாட வாழ்க்கையை பட்டினியின்றி கொண்டு போவதே ஒரு பெருங்கனவாய் ஆகிவிட்ட இவர்களுக்கு.