Monday, November 26, 2007

காதலாகிக் கசிந்து - 6

அது ஒரு சனிக்கெழம. அதனால டியூசன் கொஞ்சம் லேட்டாத் தான் ஆரம்பிக்கும். செல்லப்பாவும், சிவாவும் 7 மணி வாக்குல அப்துல் காதர் சார் வீட்டுக்கு போனாங்க. இவனுக ரெண்டு பேரும் போய் தான் வாத்தியார எழுப்பினானுக. ரெண்டு பேரயும் உக்காரச் சொல்லிட்டு வாத்தியார் பல் தேய்க்க போய்ட்டாரு. ரெண்டு நிமிசத்துல சாருவும், காயத்ரியும் உள்ள வரவும் பயக்க ரெண்டு பேரும் தெம்பா நிமிர்ந்து உக்காந்தானுக. சிவாவுக்கு ஒரு இனம் புரியாத சந்தோசம் வந்தது.

சாரு அடர் ஊதாவும், வெள்ளையும் கலந்த ஒரு சுரிதார் போட்டிருந்தா. வெள்ளைக் கல் வச்ச சிறிய தொங்கட்டான் நான் சாருவோட காதுலயாக்கும் இருக்கேன்னு பெருமையா ஆடிட்டு இருந்தது. எப்பவும் போல இன்னைக்கும் தல கொள்ளாம மல்லியப் பூ வச்சிருந்தா. காலங்காத்தால இவ்வளவு மல்லிகை இவளுக்கு எங்க கெடச்சிருக்கும்னு செல்லப்பா மெல்ல சிவாவை காதக் கடிச்சான்.

காயத்ரியும் செல்லப்பாவும் மெதுவா பேச ஆரம்பிக்க, மெல்லிய புன்முறுவலோட அத சாரு பாத்துட்டு இருந்தா. செல்லப்பா, சாரு, காயத்ரி மூனு பேரும் இதுக்கு முன்னால ஹிந்தி டியூசன்ல ஒன்னா படிச்சிருக்கதால அவங்களுக்கு அறிமுகம் தேவைப் படல. சிவாவுக்கு அவங்களப் பத்தி முன்னால தெரியாததால அவங்க உரையாடல்ல ஆர்வம் காட்டாதவன் மாதிரி வேதியல் பொஸ்தத்த புரட்டுற மாதிரி பாவலா பண்ணிட்டு இருந்தான். பள்ளிக்கூடத்த பத்தி, வரப் போற பொதுத் தேர்வ பத்தியெல்லாம் செல்லப்பாவும் காயத்ரியும் கத விட்டுட்டு இருந்தாங்க.

கொஞ்ச நேரத்துல வாத்தியார் வரவும் எல்லாரும் அமைதியானாங்க. வாத்தியார் IUPAC வரிசை நிலைகளப் பத்தி வெளக்கினாரு. வாத்தியார் வீட்டுல தனியா கரும்பலகை இல்லாததால ஒவ்வொருத்தர்கிட்டயும் நோட்ட வாங்கி அதுல சமன்பாட எழுதி எல்லாருக்கும் வெளங்க வைப்பாரு. சிவாவும் செல்லப்பாவும் வைச்சிருந்த நோட்டு, போன வருசம் டி.வி.எஸ் கம்பெணில கொடுத்த மாசக் காலண்டர மடக்கித் தைச்சது. இந்த மாதிரி மாசக் காலண்டர்கள்ல பின்பக்கம் நல்ல காகிதத்துல எழுதறதுக்கு வசதியா இருக்கும். இருவது, முப்பது ரூபா கொடுத்து நீள நோட்டுக்கள வாங்காம காலண்டரையே நோட்டா மாத்தியிருந்த செல்லப்பா, சிவாவின் எளிமை சாருவோட மனசுல அவங்களப்பத்தி ஒரு நல்ல அபிப்பிராயத்த உண்டு பண்ணுச்சு.

மறுபடியும் வாத்தியார் இவங்க எல்லாத்தயும் பொஸ்தகத்துல ஒரு பக்கத்த வாசிக்கச் சொல்லிட்டு வீட்டுக்குள்ள போனாரு. கொஞ்ச நேரம் வாசிச்சிட்டு காயத்ரியும், செல்லப்பாவும் திரும்பவும் பேச ஆரம்பிச்சாங்க. காயத்ரி அவங்க பள்ளிக்கூடத்துல இருந்து இன்னும் ரெண்டு பிள்ளைகளும், ஒரு பையனும் அடுத்த வாரத்துல இருந்து அப்துல்காதர் சார் கிட்ட டியூசனுக்கு வரப் போறதா சொன்னா. உடனே செல்லப்பா "அடுத்த வாரம் எப்ப வரும்னு ஆசையா காத்துகிட்டு இருக்கேன்னு" சொல்லவும் சிவா அவனப் பாத்து ஒரு முற முறைச்சான்.

உடனே காயத்திரி சிவாவப் பாத்து, "உன் பிரண்ட் ரொம்ப அமைதி போல... பேரு என்ன?" அப்படின்னு கேட்டா. செல்லப்பா, "அவம்பேரு சிவா"ன்னு சொல்லவும் அது வர பொஸ்தத்த வாசிச்சிட்டு இருந்த சாரு ஆவலோடயும் வெக்கத்தோடயும் ரொம்ப ரகசியமான குரல்ல காயத்ரி கிட்ட "என்ன பேராம்"ன்னு கேக்கவும் சிவாவுக்கு வார்த்தையால விவரிக்க முடியாத ஒரு பரவசம் மனசுக்குல பரவுச்சு... அடுத்த நொடி ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் ஊடுருவிப் பாத்துக்கிட்டாங்க. அந்த கனத்தை இன்னும் ரம்மியமாக்குற மாதிரி சாருவோட தலையில இருந்த மல்லிகை அந்த அறை முழுக்க வாசணை பரப்புச்சு..

Saturday, July 21, 2007

காதலாகிக் கசிந்து - 5

இருபாலரும் படிக்குத அந்த பள்ளியூடத்துல பொட்டப் பிள்ளைகளுக்கு பாவாட, சட்டை, தாவனி தான் சீருட. வெளியில அங்கி, குழாயி, பனியன்னு பயக்க போடுத எல்லாத்தயும் போட்டுட்டு கொஞ்சங்கொஞ்சமா ஒரு கலாச்சாரமே அழிஞ்சிகிட்டு வார காலத்துல பிள்ளைகள் பள்ளியூடத்திலயாவது தாவனி போட்டுட்டு போகுதுகளேன்னு அதுகள பெத்தவுக கொஞ்சம் ஆறுதல் பட்டுக்கிட்டாக

பள்ளியூடத்துல காலை வகுப்பு ஆரம்பிக்கதுக்கு முன்னால "நீராருங் கடலுடுத்த" தினமும் ஒலிக்க விடுதது வழக்கம். மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை எழுதின அந்தப் பாட்டக் கேக்குதப்போ எல்லாம் சிவாவுக்கு புல்லரிக்கும். தமிழ்த்தாய் வாழ்த்தோட நாள ஆரம்பிக்கறதுலதான் எத்தனை சுகம்ன்னு செல்லப்பாகிட்ட சொன்னான்....

பெளதீக வாத்தியார் இராமநாதன் பாடத்த ஆரம்பிச்சாரு... ஒரு சமன்பாட்டக் குடுத்து எல்லாரயும் போடச் சொன்னாரு.. எல்லாரும் அத வச்சு போரடிக்கிட்டு இருக்குதப்போ, சிவா அத நொடியில முடிச்சு வாத்தியார் கிட்ட காட்டினான். சந்தோசமான வாத்தியாரு, "உன்ன மிஞ்ச யாரும் கெடயாது டே"ன்னு முதுகுல தட்டிக் கொடுத்தாரு. மத்த எல்லாரும் இன்னும் அந்தச் சமன்பாடோட மண்டய ஒடச்சிகிட்டு இருந்ததுக. திடீர்னு மல்லிகை வாசம் வகுப்புக்குள்ள பரவுச்சு... உடனே சிவாவுக்கு சாருலதா ஞாபகம் வந்துச்சு.

சாருலதா அவளோட பள்ளியூடத்துல காயத்ரி கூட பேசிட்டு இருந்தா. காயத்திரி அதுக்குள்ள அவ கூட படிக்குற எல்லார் கிட்டயும் அப்துல்காதர் சார் டியூசன்ல புதுசா சேந்த்திருக்குற சிவாவப் பத்தி புகழ ஆரம்பிச்சா. பிள்ளைகள் எல்லாம் ஆன்னு அவ சொல்லுததக் கேட்டுகிட்டு இருந்ததுங்க.... இத்தனைக்கும் சாருவுக்கோ, காயத்ரிக்கோ சிவாவோட பேரு என்னான்னே தெரியாது. சாருவு காலயில சிவா தன் கண்ண ஊடுருவிப் பாத்தத நெனச்சுப் பாத்தா... காயத்ரி சொல்லச் சொல்ல இன்னும் ரெண்டு, மூனு பிள்ளேள் "எடே நாங்களும் நாளயிலருந்து உங்க டியூசனுக்கு வாரோம்"ன்னு சொல்லவும் சாரு காயத்ரியப் பாத்து முறைச்சா...

அவுக வகுப்புல உள்ள சேரனுக்கும், ரவிக்கும் இதக் கேக்க கேக்க எரிச்சலா வந்தது. இருக்காதா பின்ன, சாரு கிட்ட எத்தனையோ தடவ காதலச் சொல்லியும் அவ கண்டுக்கிடாம இருந்தாலும் இன்னும் முயற்சி பண்ணிட்டு இருக்குத பயக்க அவனுக ரெண்டு பேரும்.

பள்ளியூடம் முடிஞ்சு சாருவும் காயத்ரியும் வீடு திரும்பிக்கிட்டு இருந்தப்போ எதுக்க சிவாவும், செல்லப்பாவும் சைக்கிள்ல கடந்து போனாங்க... காயத்ரியும் செல்லப்பாவும் ஒருத்தர ஒருத்தர் பாத்து சிரிச்சிகிட்டாக. சிவா சாருவப் ஒரு தடவ பாத்துட்டு தலயக் குனிஞ்சிகிட்டான். சாருவுக்கு இது வரயில்லாத ஒரு படபடப்பு மனசுக்குள்ள வந்தது...

Sunday, July 15, 2007

எல்லாரும் சௌக்கியமா...?

என் இனிய (வலை) தமிழ் மக்களே...

நீண்ட இடைவெளிக்குப் பின்னால எழுதுதேன். கடைசியா பதிவு போட்டு ஆறேழு மாசம் இருக்குமின்னு நெனக்கேன். பதிவுகள படிக்கதுக்கே நேரம் இல்லாதபோது எழுத சுத்தமா சமயமில்ல.

திரும்ப வந்து தமிழ்மணத்த பாத்தா அடடா... எத்தன முன்னேற்றம்....!!!! புதுசா நெறய பேரு நல்லா எழுதுதாங்க... பழய ஆளுக நெறய பேரக் காணோம்... முன்னாடி இருந்த பூசல் சச்சரவு எல்லாம் இப்போ கொஞ்சம் கொறஞ்சிருக்குதப் பாக்குதப்போ கொஞ்சம் ஆறுதல்.

வலை நண்பர்கள்ல கானா பிரபா மட்டும் தான் இன்னும் தொடர்புல இருக்காரு. ஊரு ஊரா மாநாடு , பதிவர் சந்திப்பு எல்லாம் போட்டு, போண்டா, எள்ளுருண்டை எல்லாம் சாப்பிட்ட வலை நண்பர்கள் எல்லாரும் அதுக்கு அப்புறமா பேசிக்கிறீகளா இல்ல ரயில் சினேகம் மாதிரி தானா?

ஜி.ரா, டுபுக்கு அண்ணாச்சி, நிலவு நண்பன் எல்லாரும் நலமா? இனி கொஞ்சம் நேரம் எழுததுக்கு கெடைக்குமின்னு நெனக்கேன். பாக்கலாம்....


Wednesday, January 17, 2007

காதலாகிக் கசிந்து - 4

செல்லப்பா சிவாகிட்ட "அந்த வாயாடிப் பிள்ளையோட பேரு காயத்ரி, அந்த கத்திரிப்பூக் கலர் சுடிதார் பொண்ணு பேரு சாருலதா" அப்படின்னு சொன்னான். சாருலதாங்குத பேருக்கு அழகுன்னு அர்த்தமாம், பேருக்கேத்த மாதிரி அலட்டல் இல்லாத அமைதியான அழகு சாருவுக்கு. அவ அப்பாவுக்கு பாண்டிச்சேரியிலிருந்து மாத்தலாகி நெல்லைக்கு சாருவோட குடும்பம் வந்து மூனு வருசம் ஆச்சாம். சாருவுக்கு பத்து வயசுல டிங்குன்னு ஒரு தம்பி இருக்கானாம்.

அதோட சாரு படிக்குத அந்த மெட்ரிக் பள்ளியூடத்திலயும், அவ இருந்த அன்பு நகர் ஏரியாலயும் நெறய பயக்க சாரு பின்னாடி சுத்துனாலும் சாரு யாரயும் சட்டை பண்ணினது இல்ல. இது வரைக்கும் ஒரு 25 பயக்களாவது அவ கிட்ட காதலச் சொல்லியிருப்பானுவ. ஆனா குனிஞ்ச தல நிமிராம தெருவுல நடக்குத சாரு இத எல்லாத்தயும் நிராகரிச்சிட்டா. சில பேரு அவ மாட்டேன்னு சொன்னதும் நடு ரோட்டுல கெடந்து உருண்டிருக்கானுவ, சிலரு பித்து பிடிச்ச மாதிரி தாடி, கீடியெல்லாம் வளத்து, செய்யது பீடி குடிச்சிட்டு அலஞ்சானுவ. இவ்வளவு பிரபலமான சாருவப் பத்தி சிவா ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கான், ஆனா இப்படியெல்லாம் பயக்கள அலக்கழிக்குத அந்தப் பிள்ள ஒரு திமிரு புடிச்சவளாத் தான் இருப்பான்னு இம்புட்டு நாளா நெனச்சுகிட்டு இருந்தான். சாருவ நேர்ல பாத்ததும் அவன் அபிப்பிராயத்த மாத்திக்கிட்டான்.

சிவாவுக்கு தெரிஞ்ச பயலான சுப்பையா இதுக்கு முன்னால சாருவ பத்தி சொல்லிருக்கான். சுப்பையாவும் ஒரு தலயா காதலிச்சிட்டு இருந்தான். சுப்பையா எப்ப பாத்தாலும் ஒரு வரியாவது சாருவப் பத்தி சொல்லாம இருக்க மாட்டான். இந்த மாதிரி நெறய பைத்தியாரப் பயக்க இருந்தானுவ. சாருவ பாக்கலைன்னா கூட அவ வீட்ட, அவ நாய்க்குட்டிய, அவ தம்பிய பாத்தா போதும் பிறவிப் பயன அடைஞ்சிட்ட மாதிரி ஆயிடுவானுவ. சாரு பேரழகி கெடயாது அப்பிடி இருந்தும் ஏன் இந்தக் கிறுக்குப் பயக்க இப்பிடி திரியுதானுவன்னு ஆச்சரியப் பட்டான் சிவா. அத செல்லப்பாகிட்ட அவன் சொன்னதும் பதிலுக்கு செல்லப்பா, "சாருவாவது பரவாயில்ல டே ஆனா தேனி குஞ்சரம்மா ரேஞ்சு பிள்ளேல எல்லாம் ஒருத்தன் மாத்தி ஒருத்தன் பயங்கர பில்டப் கொடுத்து ஏத்தி விட்ருதானுவ, அவளுகளும் என்னப் பாரு என் அழகப் பாருன்னு ஊருக்குள்ள மெதப்புல சுத்திட்டு இருக்காளுவ. அதத் தான் தாங்க முடியல" அப்படின்னான்.

டியூசன் முடிஞ்சு வீட்டுக்கு வந்த சிவா "இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே" பாட்ட முனுமுனுத்தான். அப்பத்தான் தூங்கி முழிச்ச அவன் தங்கச்சி மகராசி, வினோதமா பாத்தா. "மைனர் இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்க மாதிரி தெரியுது, என்ன டே விசயம்" அப்படின்னா. "உன் சோழியப் பாத்துகிட்டு போ" அப்படின்னு சொல்லிட்டு திரும்பவும் பாட்ட முனுமுனுத்தான். அதுக்குள்ள அவன் அப்பா கெளம்பி வேலைக்கு போக தயாரா இருந்தார். திருநெல்வேலி டவுனில ஒரு தனியார் கம்பெணியில அவரு வேல பாத்தாரு. காலயில எட்டு மணிக்கு போனா கருக்கல்ல தான் வருவாரு. ஏகப்பட்ட சொத்து சொகத்தோட பொறந்து, வியாபாரம் தீடிர்னு நொடிஞ்சு போனதால எல்லாத்தயும் இழந்து நிக்குத ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம் அவரோடது. ஆனா ஊருக்குள்ள இன்னும் பழய மரியாத இருந்தது அவரு குடும்பத்துக்கு.

பள்ளியூடத்துக்கு எல்லாத்தயும் தயார் பண்ணிட்டு, சாப்புடதுக்கு உக்காந்தான் சிவா. சூடா இட்லியும், புளி மொளகாயும் எடுத்து வச்சா அவன் அம்மா. பையன் மேல ரொம்ப பாசம் அவளுக்கு. அதுவும் அவன் +2 படிக்கதால அவன் மேல அப்பா அம்மா ரெண்டு பேரும் ரொம்ப அக்கறையா இருந்தாக. பையன் தான் இழந்த புகழ், பொருள் எல்லாத்தயும் மீட்டு கோடுக்கப் போறான்னு சிவாவோட அப்பா மந்திரமூர்த்திக்கு நெறயவே நம்பிக்க. "நேத்து இடிச்ச எள்ளு மொளவடி வைக்கட்டுமா"ன்னு கேட்டுட்டு அவன் பதிலுக்கு காத்திருக்காம எள்ளு மொளவடிய வச்சு நல்லெண்ணெய்ய ஊத்தினா. அவ கைப்பக்குவத்துல எது செஞ்சாலும் தேவாமிருதமா இருக்கும். அதுலயும் இட்லியப் பத்தி கேக்கவே வேண்டாம், அவ்வளவு மெதுவா பஞ்சு மாதிரி இருக்கும். லீவு நாளுன்னா எத்தன இட்லி வயித்துக்குள்ள போகுதுன்னு கணக்கே இருக்காது. இன்னிக்கு பள்ளியூடம் போறதால ஆறு இட்லியோட நிறுத்திகிட்டான்.

சாப்ட்டு முடிக்கவும் செல்லப்பா வந்தான். சாப்டியான்னு சிவா கேட்டதுக்கு ஆன்னு தலயாட்டினான். ஆனா அத நம்பாத சிவா "எல கத விடாத, ஒழுங்கா ரெண்டு இட்லிய சாப்ட்டு போட்டு வா. எம்மா இவனுக்கு இட்லி எடுத்து வை"ன்னு அவன் சொல்லுததுக்குள்ள அவன் அம்மா தட்டுல இட்லியும் புளி மொளகாயும் போட்டு கொண்டு வந்தா. செல்லப்பா ஒன்னும் சொல்லாம அமைதியா வாங்கிச் சாப்ட்டான். செல்லப்பாவுக்கு நான்குனேரி தான் சொந்த ஊரு, அவன் அப்பா அங்க கஷ்டப் படுததால இங்க அவன் மாமா வீட்டுல தங்கி படிச்சான். மாமா வீட்டுலயும் கஷ்டங்கறதால பாதி நேரம் அர வயித்தோட தான் பள்ளியூடத்துக்கு போவான். ஆனா சிவா வீட்டுக்கு வந்தா அவன சிவா சாப்புடாம விடமாட்டான்.

செல்லப்பா சாப்புட்டதும் ரெண்டு பேருகும் காப்பி கொடுத்தா சிவா அம்மா. அதக் ஒரே மடக்குல குடிச்சிட்டு செல்லப்பா சைக்கிள மிதிக்க சிவா பின்னால உக்காந்து பள்ளியூடத்துக்கு கெளம்பினானுவ.