Thursday, August 31, 2006

சிகரம் தொட்ட தமிழன் சரத்பாபு...

பொறியியல் படிப்ப முடிச்சுட்டு, எந்தக் கம்பெணியில சேந்து எத்தன லட்சம் சம்பளம் வாங்கலாம், IIM-ல படிச்சுட்டு எப்படி கோடி கோடியா பணம் சேக்கலாம், ஆடம்பரமான வீடு, சொகுசு கார் வாங்கலாமுன்னு நெனக்குத இன்னைக்கு உள்ள இளய தலமுற ஆளுகளுக்கு மத்தில ஒரு உதாரண புருசன் சரத்பாபு.

சரத்பாபு பத்தி தெரியாதவங்களுக்கு: ரொம்ப ஏழ்மயான குடும்பத்துல பொறந்து, தன்னோட கடுமயான உழைப்பால, BITS Pilani, IIM - Ahmedabad இங்கயெல்லாம் படிச்சுட்டு, லட்ச லட்சமா சம்பளம் கெடக்கக்கூடிய பன்னாட்டு நிறுவனங்களோட வேலய வேண்டாமின்னு உதறித் தள்ளிட்டு, சுயமா தொழில் தொடங்கி தன்ன மாரி வாழ்க்கயில சிரமப் படுதவங்களுக்கு வேல கொடுத்து அவங்க வாழ்க்கய மேம்படுத்தனுமின்னு நெனக்குத ஒரு அற்புதமான பிறவி.

Foodking Catering Service அப்டின்னு அஹமதாபாத்துல ஒரு உணவுக் கூடத்த ஆரம்பிச்சு இப்போ நாப்பது பேருக்கு வேல கொடுத்துகிட்டு இருக்காரு. அவரோட உணவுக் கூடத்தக் குத்து வெளக்கு ஏத்தி தெறந்து வச்சது நம்ம இன்போசிஸ் தல நாராயண மூர்த்தி. அடுத்தால சென்னயிலயும் ஒரு கிளை தொடங்கப் போறாராம்.

குழந்தைப் பருவத்துல அவுக அம்மா, இட்லி வியாபாரம் பண்ணியும், சத்துணவு கூடத்துல மாசம் 30 ரூவாய்க்கு வேல பாத்தும் சரத்பாபுவயும் அவரு சகோதரிகளயும் வளத்து இருக்காக. மடிப்பாக்கத்துல ஒரு சேரிப் பகுதில பொறந்த சரத்பாபு குடும்பச் சூழல், அம்மா படுத சிரமம் எல்லாம் உணர்ந்து நல்லா படிச்சிருக்காரு. பொறியியல் கல்லூரில படிக்க வாங்குன கடன அடைக்க கொஞ்ச நாள் போலாரிஸ்ல வேல பாத்திருக்காரு. அப்புறம் IIM-ல MBA முடிச்சுட்டு இந்த உணவுக் கூடத்த தொடங்கிருக்காரு.

கார், பங்களா ஆடம்பர வாழ்க்யில தனக்கு எப்பவுமே நாட்டம் கெடயாது. தன்னோட லட்சியம் அம்பானி மாரி, நாராயணமூர்த்தி மாரி இருபத்தய்யாயிரம் பேருக்கு வேல கொடுத்து அந்தக் குடும்பங்களோட வாழ்க்கய மேம்ப்டுத்தனுங்கறது தான்னு சொல்லுதாரு. இந்த வருசம் 500 பேருக்கு வேலயும், அடுத்த அஞ்சு வருசத்துல 15,000 பேருக்கு வேல வாய்பும் கொடுக்கது தான் இவருக்கு இப்ப இருக்குத ஒரே லட்சியமாம்.

வியாபார நோக்கத்தோட தொழில் பண்ணாம நம்மால பத்து குடும்பம் நல்லா இருக்கனும்னு நெனக்குத பெரிய மனசு எல்லாத்துக்கும் அதுவும் இந்த சின்ன வயசுல வராது. அயல் நாட்டு மோகத்துல, கண்டதே காட்சி கொண்டதே கோலமின்னு இருக்குத நம்ம இளய தலமுற சரத்பாபுவப் பாத்தாவது திருந்தனும். சரத்பாபுவோட முயற்சி மேன்மேலும் வெற்றியடய நாம் வாழ்த்துவோம்.

இது மாரியே அயிரம் சரத்பாபு தமிழ்நாட்டுல உருவாகனும், தமிழ்ர் வாழ்க்கத் தரம் முன்னேறனும்.... இத மாரி ஏழ்மயான குடும்பத்துல பொறந்த குழந்தைகள முன்னேற்றதுக்கு உங்களால முடிஞ்ச உதவியப் பண்ணுங்கன்னு உங்கள வேண்டிக் கேட்டுக்கிடுதேன்....

Monday, August 28, 2006

ஆறு (கோமாளிக்) காதல் - II

நாலாங் காதல்: கணேசனும், சுப்பய்யாவும் அண்ணன் தம்பி. ரெண்டு பேரும் பாசக்காரப் பயலுவ. ஆனா ஜாலக்கார ஜமுனாவான ரீட்டாங்குத பிள்ளைக்காக ரெண்டு பேரும் அடிச்சிகிட்டு ரோட்டுல சட்டய கிழிச்சுகிட்டானுவ. அதுக்கு காரணம் ரீட்டா அந்த ஊரு பஸ் ஸ்டாப்புக்கு வந்து கணேசனப் பாத்து பல்லக் காட்டிட்டு, அப்புறம் அவன் தம்பி சுப்பய்யாவுக்கு டாட்டா காட்டிட்டு வார பஸ்சு எதுலயும் ஏறாம எல்லா பயக்க கண்ணுலயும் மண்ணத் தூவிட்டு ஊருக்குள்ள போயிட்டா. ஆனா அது தெரியாத ரெண்டு பயக்களும் ரீட்டா என்னத்தான் லுக்கு விட்டான்னு பஸ்சுக்குள்ளயே ஒருத்தன் குதவலய ஒருத்தன் நெறிச்சு அது பத்தாதுன்னு பஸ்ச நிப்பாட்டச் சொல்லி நடு ரோட்டுல கெடந்து உருண்டானுவ. கணேசனுக்கு ஆதரவா ஒரு கும்பலும், சுப்பய்யாவுக்கு ஆதரவா ஒரு கும்பலும் ஊருக்குள்ளத் திரிஞ்சானுவ. இதயெல்லாம் பாத்துட்டு அவங்க அய்யா "சவுத்துப் பயக்க வீட்ல அடங்கலயின்னா ஊருல தான் அடங்குவானுவன்னு" கையக் கழுவிட்டாரு. கடசியில ரெண்டு பேரும் ஒரு ஒப்பந்தம் போட்டானுவ. மறுநாள் பஸ் ஸ்டாப்ல வச்சு ரீட்டாகிட்ட போய் யார உனக்கு புடிச்சிருக்குன்னு கேப்போம். அவ புடிச்சிருக்குன்னு சொன்ன பயலுக்கு ரீட்டாவ விட்டுக் கொடுத்துட்டு இன்னொரு பய ஆட்டைல இருந்து வெளகிரனும்னு முடிவாச்சு. அடுத்த நா காலயில ரெண்டு கோஷ்டியும் 7 மணியில இருந்தே பஸ் ஸ்டாப்ல காவல் காக்க ஆரம்பிச்சிட்டானுவ. மத்யானம் வர காத்திருந்தும் ரீட்டா வார பாடா இல்ல. உடனே ரெண்டு பயக்களும் பொறும இல்லாம, அங்க இங்க விசாரிச்சு நேர ரீட்டா வீட்டுக்கே போய் கதவ தட்டுனானுவ. கதவத் தெறந்து இவனுகள பாத்த ரீட்டா மயக்கம் போட்டு விழாத குற தான். இப்பவே உன் முடிவச் சொல்லு, நானா? இவனா? இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரியாம போமாட்டோம் அப்டின்னு கணேசன் கத்த, வீட்டுக்குள்ள இருந்து பயில்வான் ரங்கநாதன் ரேஞ்சுக்கு ஒரு மாக்கான் வந்து நின்னான். எலேய் உங்களுக்கு முடிவுதான தெரியனும், இந்தா தெரியப் படுத்துதேன்னுட்டு வெறகு கம்ப எடுத்து கண்ணு மண்ணு தெரியாம விளாசித் தள்ளிட்டான். ஆனா பாவம் அண்ணன் தம்பி ரெண்டு பேருக்குமே ரீட்டாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு குழந்த இருக்குங்கற விசயம் அதுக்கப்புறம் தான் தெரிஞ்சுது.

அஞ்சாங் காதல்: என்னடா பயக்களோட இலவ மட்டுமே சொல்லுதானே, பிள்ளேளோட காதல சொல்லலியேன்னு யோசிக்காதிய... அந்த குறையத் தீக்க கடைசி ரெண்டுக் காதலும் பிள்ளேளோடது தான். கஜப்பிரியான்னா எங்க ஊருல ரொம்ப பிரபலம். ஒம்பதாங் கிளாசு உரசுமேரி பள்ளியூடத்துல படிக்கும்போதே அப்போ +2 படிச்சுகிட்டு இருந்த தருமனோட தனியா உல்லாசச் சுற்றுலா ஒரு வாரம் போயிட்டு வந்து ஊருக்குள்ள பரபரப்பு உண்டாக்கினவ. பேசுதது எல்லாம் பொய்யத் தவிர வேற ஒன்னும் கெடயாது. "இப்பத் தான் நடிகர் பிரசாந்தோட போன்ல பேசிட்டு இருந்தேன்னு வாய் கூசாம பொய் சொல்லுவா. அவ கண்ணுல வந்து மாட்டினான் அப்பாவிப் பயலான அப்பூண்டு ஆறுமுகம். குனிஞ்ச தல நிமிராம தெருவில நடக்குத பய. பொட்டப் பிள்ளேள் கிட்ட பேச மாட்டேன்னு அவுக பாட்டிக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்தவன் ஆறுமுகம். அப்படிப்பட்ட பயல கொஞ்சங் கொஞ்சமா பேசி மனச மாத்தி அவ வலயில விழ வச்சா கஜூ. அப்பூண்டு ஆறுமுகத்த பின்னாடி உக்கார வச்சு கயத்தாறு, கங்ககொண்டான் ரோட்டுல அவ சன்னில(Sunny) வேகமாப் போறான்னு தகவல் வர ஆரம்பிச்சுது. காணாததக் கண்ட மாதிரி அப்பூண்டு பயலும் கொஞ்ச நாலா சந்தோசமா அலஞ்சான். வெள்ளக் கலரு பூடிசு, கருப்புக் கண்ணாடி எல்லாம் ராத்திரி போட்டுட்டு ராஜபார்வைக் கமல் மரரி ஊருக்குள்ள ஒரு தினுசா சுத்திட்டு இருந்தான். கேட்டா கஜூவுக்கு அது தான் புடிக்கும்பான். நம்ம பயக்களும், "அடப் பயவிள்ள அந்த செருக்கிக்காக ராத்திரியும் ஏமுல கருப்புக் கண்ணாடியப் போடுதேன்னு" கேட்டுப் பாத்து சலிச்சு போய்ட்டானுவ. அப்பூண்டு இப்பிடி கஜூவோட சுத்துதது அவளோட முன்னாள் காதலனுவ நாலஞ்சு பயக்களுக்குத் தெரிய வந்துச்சு. கடுப்பான அவனுக எல்லாம் சேந்து அப்பூண்டு ஆறுமுகத்தத் தனியா கூட்டிட்டு போயி முன் மண்டயில பாதி முடியயும், பாதி மீசயயும் செரச்சு அணுப்பிட்டானுவ. அதுக்கு அப்புறம் அப்பூண்டு கஜூ மட்டுமில்ல எந்தப் பிள்ளய எதுக்க பாத்தாலும் தல தெறிக்க ஒடுதான்...

ஆறாங் காதல்: ரோசின்னு எங்க ஊர்ல ஒரு பிள்ள இருந்தது. அவங்க அய்யா திருநெல்வேலில பெரிய மாட்டு டாக்டரு. ரோசியோட மனசுல ஆசய வளத்தது வெள்ளப் பாண்டின்னு ஒரு வெளங்காத பய. தெனமும் காலேசுக்கு போற மாரி பஸ்சுல வருவான், கலர் கலரா சட்டை பேண்ட்டு போட்டு எப்பவும் புட்போர்ட்ல தொங்கிட்டே தான் திரியுவான். ரொம்ப நாள் கழிச்சு தான் அவன் படிக்கிறது டியூட்டோரியல் காலேசுன்னு எங்களுக்கு தெரிஞ்சுது.ஆனா அதுக்குள்ள காரியம் கைய மீறி போயிட்டுது. ரோசிக்கு அவன் மேல இலவு வந்து, ரெண்டு பேரும் பஸ்லேயே காதல் பண்ண ஆரம்பிச்சாவ. அவன் கேக்குதப்ப எல்லாம் அம்பது, நூறுன்னு அவனுக்கு ரூவாயக் கொடுத்து அவன காதலிச்சா அந்த புண்ணியவதி. ஒரு நாள் ஆயிரம் ரூவா வேணுமின்னு ஒயிட்டு கேட்டதும் அவளால புரட்ட முடியல. உடனே வெள்ளையும் அவளும் சேந்து ஒரு திட்டம் போட்டாவ. அது என்னான்னா, ரோசி வீட்ல அவங்க அய்யா வாங்கிருக்க ஆயிரத்து ஐநூறு ரூவா மதிப்புள்ள ராசபாளயம் நாய வெள்ள திருடி விக்கனும். வார காசுல வெள்ளைக்கு ஆயிரம், ரோசிக்கு மிச்சமின்னு முடிவாச்சுது. ரோசி வீட்ல எல்லாரும் ஊருக்கு போற ஒரு நாள் பாத்து வெள்ள அங்க திருடப்போனான். நாய எப்பிடியோ புடிச்சு கொண்டு போய் தச்சநல்லூர்ல வித்துட்டு வந்துட்டான். ஆனா அவன் கெரகம், நாய வாங்கின ஆளு ஒரு நாள் அதுக்கு கால்ல அடிபட்டிருக்குன்னு மாட்டு டாக்டரான நம்ம ரோசி அய்யா கிட்ட போக, அப்புறமென்ன வெள்ளய பாளயங்கோட்ட செயிலுல செயிலரோட நாயக் குளிப்பாட்ட கூட்டிட்டு போய்ட்டாக. வெள்ள வருவான் வருவான்னு தெருல நாய் குலைக்குதப்போ எல்லாம் ரோசி ஓடி ஓடி வந்து கிழக்கே போகும் இரயில் பாஞ்சாலி மாரி கொஞ்ச நாள் பாத்தா. பிறகு அவுக அப்பா ஆசப்படி மதுரயில மாட்டு டாக்டரா இருக்குத ஒரு பயலக் கட்டிக்கிட்டா.

Tuesday, August 22, 2006

சிட்னியில் பண்பாளர்களைச் சந்தித்தேன்...

போன வெள்ளிக் கெழம சிட்னி முருகன் கோயில்ல வச்சு, சிட்னி வாழ் தமிழ் அன்பு நெஞ்சங்கள சந்திக்கதுக்கு ஒரு அருமையான வாய்ப்பு கெடச்சுது. நான் சிட்னிக்கு வந்திருக்கேன்னு ஒரு பதிவு போட்டதும் உடனே சந்திக்கலாமான்னு கேட்டு அன்பு நண்பன் கானாபிரபா பின்னூட்டம் போட்டிருந்தாரு. அவரோட மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் எல்லாத்தயும் கொடுத்து பேசச் சொன்னாரு. ரெண்டு பேருக்கும் வேல அதிகம இருந்ததால பாக்க முடியல, போனிலேயே மூனு வாரங்கள் பேசிக்கிட்டோம். கடைசில போன வாரம் தான் சந்திக்க முடிஞ்சது. இதுக்கிடையில கஸ்தூரிப்பெண் தானும் சிட்னியில இருக்கதா பின்னூட்டம் போட்ருந்தாக. அவுகளும் மழை ஷ்ரேயாவும் தோழிகள். சிட்னி முருகன் கோவிலுக்கு வாங்க நாம எல்லாரும் சந்திக்கலாமுன்னு சொன்னாக. சரி எல்லாரும் சாயங்காலம் 7 மணி வாக்குல கோயில்ல பாக்கதுன்னு முடிவு பண்ணினோம்.

முருகன் கோயிலுக்கு உங்கள நாங்களே வந்து கூட்டிட்டுப் போறோமின்னு, பிரபாவும், கஸ்தூரிப்பெண்ணும் சொன்னாவ, ஆனா எங்க ஆபிசுல வேல செய்யுத ஒருத்தரோட வீடும் கோயிலுக்கு பக்கத்துல இருக்கதால நான் அவர் கூட வந்துருதேன்னு சொன்னேன். ஆனா அந்த புண்ணியவாளரு கடைசி நேரத்துல வேற வேல இருக்குன்னு கைய விரிச்சிட்டாரு. அப்புறம் எங்க ஆபிசு இருக்குத ரோட்ஸ்ங்கிற(Rhodes) எடத்தில இருந்து ரெண்டு டிரெய்ன் மாறி வெஸ்ட்மீட்ல(Westmead) உள்ள முருகன் கோயிலுக்கு ஒரு வழியா வந்து ஏழு மணிக்கு வந்து சேந்தேன்.கோயிலுக்குள்ள உக்காந்து வேடிக்க பாத்துகிட்டு இருந்தப்போ பிரபா செல்போனில கூப்புட்டாரு. அவர சுலபமா அடையாளம் கண்டு பிடிக்க முடிஞ்சுது. அவரப் பாத்ததுமே ரொம்ப நாள் பழகின நண்பன பாக்குதது மாரியே இருந்தது. புதுசா ஒருத்தர் கூட பேசுதோமுன்னு ஒரு வித்தியாசம் தெரியல. ரெண்டு பேரும் பேசிகிட்டிருக்கும் போதே பூச ஆரம்பிச்சது. அப்போ பிரபா, அந்தக் கோயில்ல உள்ள அர்ச்சகர்கள்ல ஒருத்தரான ரவி ஐயாவ அறிமுகப் படுத்தி வச்சாரு. ரவி ஐயா நாகப்பட்டிணத்துக்காரராம் ஏழு வருசத்துக்கு முன்னாடி சிட்னில இந்தக் கோயிலுக்கு அர்ச்சகரா வந்தாராம். இந்த எடம் புடிச்சு போனதால இங்கேயே குடும்பத்தோட தங்கியிருக்காரு. இந்த கோயிலுக்கு அர்ச்சகரா வாரதுக்கு ஒரு நேர்காணல் வச்சாகளாம். அதுல பெரியப் பெரிய வேதம் படிச்ச பண்டிதர்களெல்லாம் வந்திருந்தாங்களாம். நமக்கு எங்க கெடக்க போகுதுன்னு தான் ரவி ஐயா நெனச்சாராம். ஆனா இவரு அருணகிரி நாதரோட திருப்புகழ்ல ஒரு சில வரியப் பாடி தமிழ்ல அதுக்கு அர்த்தம் சொன்னதும் கூட இருந்த எல்லாரும் கைதட்டினாகளாம். உடனே கையோட சிட்னிக்கு கூட்டிட்டு வந்துட்டாகளாம். தமிழ் பாட்டுக்கள் நெறய தெரிஞ்சு வச்சிருக்காரு. தமிழ்லயே அர்ச்சணையும் பண்ணுதாரு. தமிழ்நாட்டுக் கோயில்கள்ல கூட பாக்க முடியாத விசயம் இது.

அப்புறம் மூனு பேரும் கொழும்பு சர்வதேச வானொலி, எம்.ஜி.ஆர், திருச்சி, யாழ்ப்பானம், திருநெல்வேலி பத்தியெல்லாம் பேசிகிட்டு இருந்தோம். திருநெவேலி, மதுர, திருச்சி பக்கமெல்லாம் நம்ம ஆளுக கொழும்பு சர்வதேச வானொலியத் தான் விரும்பி கேப்போம். ஆனா பிரபா இலங்கயில அவரு இருந்த போது நம்ம ஊருல இருந்து ஒளிபரப்பாகுத சென்னை வானொலி, திருச்சி வானொலி, விவித் பாரதி எல்லாம் தான் அதிகம கேப்பாராம். நாங்க இப்பிடி கதச்சுகிட்டு இருக்கும்போது கஸ்தூரிப்பெண்கிட்ட இருந்து செல்லுல அழைப்பு வந்துச்சு. நாங்க நின்னுகிட்டு இருக்குத எடத்தச் சொன்னதும் அவுகளும் சரியா எங்கள வந்து அடயாளம் கண்டு பிடிச்சிட்டாக. ஒருத்தர ஒருத்தர் அறிமுகப் படுத்திகிட்ட பிறகு சிட்னில தமிழ் வழிக்கல்விக்கு கெடைக்கும் முக்கியத்துவத்த சொன்னாக. தமிழ ரெண்டாம் மொழியா எடுத்து படிச்சா இங்க மருத்துவக் கல்லூரிக்கு சுலபமா எடம் கெடைக்குமாம். நம்ம ஊரப் பத்தி நெனச்சுப் பாத்தேன். கொஞ்ச நாளுக்கு முன்னாடி +2வில தமிழ், சமஸ்கிருதம் எடுக்கிறதப் பத்தி தமிழ்மணத்துல சண்டபோட்டு நாறிகிட்ட நம்ம ஆளுக ஞாபகம் வந்தது. வேத்து நாட்டுக்காரன் தமிழுக்கு கொடுக்குத மரியாத கூட நம்ம ஊர்க்காரப் பயலுக கொடுக்குதது இல்லங்கறத நெனச்சு வருத்தமா இருந்தது. நாங்க இப்பிடி பேசிட்டு இருக்கும்போது மழை ஷ்ரேயா கஸ்தூரிப்பெண்ன போன்ல கூப்ட்டு வரதுக்கு கொஞ்ச நேரமாகுமின்னு சொன்னாக. ஆனா இன்னொரு வலைப்பதிவு நண்பரான கார்த்திக்வேலு கோயில் வாசல்ல எங்களுக்காக காத்திருக்குததா சொன்னாக. அவரக் கண்டு பிடிக்குததுலயும் சிரமமில்ல.

கார்த்திக்வேலு கொங்கு நாட்டுக்காரர், பிரபா, மழை ஷ்ரேயா கஸ்தூரிப்பெண் மாரியே இவரும் ரொம்ப நாளா சிட்னியில இருக்குததா சொன்னாரு. பிறகு மலையாளப் படங்கள்ல இருக்கக் கூடிய எதார்த்தம், வங்க மொழிப் படங்கள், சத்தியஜித்ரே பத்தியெல்லாம் பேசினோம். அவுக மூனு பேரும் உள்ளூர்க்காரவுகங்கறதால சிட்னியின் சிறப்பப் பத்தி சொன்னாக. நாங்க கோயிலுக்கு வரும் போது நல்லா இருந்த வானிலை மாறி பயங்கரமா குளிரெடுக்க ஆரம்பிச்சுது. கோயில்ங்கிறதுனால செருப்பு கூட போடாம நின்னதால கால் வெறச்சு போச்சு. கார்த்திக்வேலு கோயம்புத்தூர்க்காரருங்கறதால இந்தக் குளிரெல்லாம் அவருக்கு சாதாரணம்னு நெனக்கேன். கொஞ்ச நேரங் கழிச்சு மழை ஷ்ரேயாவும் அவர் கணவர் கண்ணனும் வந்தாக. அறிமுகப் படலமெல்லாம் முடிஞ்ச பிறகு கொண்டு வந்திருந்த கேமராவுல ஆளாளுக்கு படமெடுக்க ஆரம்பித்தோம், எல்லார் கையிலயும் கேமரா, நெறய படங்கள் எடுத்தோம். வலைப்பதிவர்கள் வரலாற்றுல முத முறையா கோயில்ல வச்சு நடக்கிற சந்திப்பு இதுவாத்தான் இருக்குமின்னு நெனக்கேன். கொஞ்ச நேரம் பேசினதுக்கு அப்புறம் கார்த்திக்வேலு வீடு ரொம்பத் தள்ளி இருக்கதால சீக்கிரமா போகனுமின்னு கெளம்பினாரு.

அவரு போனதுக்கு அப்புறம் நாங்க எல்லாரும் கோயில்ல சாமி கும்பிட்டுட்டு பின்னால இருக்குத இட்லிக் கடைக்குள்ள நுழஞ்சோம். ஆளாளுக்கு பணத்த எடுக்க, பிரபா அவரு தான் எல்லாருக்கும் வாங்கித் தருவேன்னு அன்புக் கட்டள போட்டுட்டாரு. இட்லி, வடை, பூரின்னு நல்லா ஒரு பிடி பிடிச்சோம். இந்த சந்திப்பு ஒரு அறிமுகப் படலம் தான், அடுத்தாப்புல செப்டம்பர் 2-ந்தேதி இன்னொரு பெரிய சந்திப்ப நடத்தலாம்னு தீர்மானம் பண்ணினோம். சாப்பிட்டு முடிச்ச பிறகு பத்து மணி ஆயிட்டுது. எல்லாரும் கெளம்பினோம். கண்ணன் என்னத் தனியா போக வேண்டாம்னு சொல்லி அவரும் ஷ்ரேயாவும் என்ன நான் தங்கியிருந்த ஓட்டல் வாசல்ல கொண்டு விட்டுட்டு போன விருந்தோம்பல் என்ன நெகிழச் வச்சுது. கார்ல வரும் போது ஈழம், சென்னை, சிட்னி பத்தியெல்லாம் கண்ணன் பேசிட்டு வந்தாரு. ரொம்பத் தங்கமான மனுசன்.

மொத்தத்துல அன்னிக்கு நாள் ரொம்ப இனிமயா இருந்துச்சு. எந்த செயற்கத் தனமும் இல்லாம எல்லாருமே இயல்பா இருந்தாக. ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல மனுசங்கள பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம். வலைப்பதிவு செஞ்சுகிட்டு இருக்குத எல்லா நண்பர்களும் உங்க சண்டயெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு, ஒத்துமயா இருங்கய்யா... ஈழத்துல உள்ள நம்ம சகோதரர்களுக்காக நாமெல்லரும் ஒன்னு சேரனும். சாதி வெறி, காழ்ப்புணர்ச்சி இதெல்லாம் விட்டுட்டு வாங்கய்யா... மனசுக்குள்ள ஆயிரம் வலி இருந்தாலும் அத வெளிக்காட்டாம சக தமிழன்னு சொன்னா பாசத்த அள்ளிக் கொட்டுத ஈழத் தமிழ் சகோதர சகோதரிகளே உங்க பாசத்த நான் உயிருள்ள வரை மறக்க மாட்டேன்....

Thursday, August 17, 2006

ஆறு காதல்...(1)

ஆறு பதிவு போடச் சொல்லி என்ன அனுசயா ஒரு மாசத்துக்கு முன்னாடியே கூப்டாக. அன்னா இன்னான்னு இப்ப தான் நேரம் கெடச்சுது. நான் ஆறு பதிவுல சொல்லப் போறது நான் பார்த்த விசித்திரமான ஆறு காதலப் பத்தி. காதல் எந்த அளவுக்கு நம்ம பயக்கள பாடாப் படுத்தி பம்பரமா ஆட்டுதுங்கறதப் பத்தி சொல்லுதேன்.

முதல் காதல்: ரத்தின குமாரு எங்க கூடப் படிச்ச ஒரு சோவாரிப் பய. தலயில காப்படி எண்ணெய தேச்சு எப்பவும் ஒரு காட்டான் லுக்குல தான் அலயுவான். வீட்ல அவங்க அய்யா ரொம்ப கண்டிப்பு, அதனால அவன் வெளில வந்தா அவுத்து விட்ட கழுத மாரி எல்லா சேட்டயும் பண்ணுவான். அவன் பக்கத்து வீட்டுக்கு தீடீர்னு கங்கானு ஒரு அக்கா வந்துச்சு. எங்கள விட நாலு வயசு பெரிய பிள்ளய அக்கான்னு தான சொல்லனும். கங்காவோட அம்மாவும் ரத்தினத்தோட அம்மாவும் நல்ல பழக ஆரம்பிச்சாக, அதனால கங்காவும் ரத்தினத்தோட வீட்டுக்கு அடிக்கடி வந்து போக ஆரம்பிச்சா. கணக்கு பண்ணுறதுல ரத்தினம் பலே கில்லாடிங்கறதால கங்காவயும் எப்படியோ வழிக்குக் கொண்டு வந்துட்டான். ரொம்ப நாளா கல்யாணம் ஆகாம இருந்த கங்காவும் காட்டான் ரத்தினத்த என் ராஜ்கிரன் நீ தாமுலன்னு சொல்லி உருகி உருகி இலவு பண்ணினா. ஒரே குச்சி ஐச ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சாப்புடதது, காட்டானுக்கு கூட்டாஞ்சோறு பொங்கி கொடுக்கதுன்னு காதல் வேக வேகமா வளந்துச்சு. அக்கா தம்பி ரேஞ்சுல இருந்ததால யாருக்கும் சந்தேகம் வரல. தினமும் அவன் லீலைகளையெல்லாம் எங்க கிட்ட வந்து சொல்லுவான். நாங்க எல்லாரும் அற்பனுக்கு பவுசு வந்தா அர்த்த ராத்திரி குட பிடிப்பான்னு காட்டான தண்ணி தெளிச்சி விட்டுட்டோம். இதுகளோட கத ரத்தினத்தோட தம்பி சந்தானத்துக்கு மட்டும் தெரியும். ஒரு நாள் ரத்தினம் சவ்வு முட்டாய் வாங்க பைசா கொடுக்கலங்கதால கொதிச்சு போய் சந்தானம் இந்த தெய்வீகக் காதலப் பத்தி எல்லார் கிட்டயும் சொல்லிப் போட்டான். அவ்வளவு தான் உடனே கங்காவுக்கு ஒரு கோயான் கோபுவ பாத்து கல்யாணத்துக்கு நாள் குறிச்சிட்டாவ அவுக வீட்டுல. நம்ம காட்டான் எங்க கிட்ட வந்து எனக்கு எலி மருந்து வாங்கிக் கொடுங்கல நான் சாகனுமின்னு சொன்னான். உடனே அவன் புடதில நாலு போட்டு வீட்ல கொண்டு போய் விட்டோம். ரெண்டு மூனு நாளுல பய சரியாயிட்டான். அடுத்த வாரமே காலேசுல புதுசா வேலைக்கு சேந்த இட்டமொழி இசக்கியம்மாங்கிற லேப் அட்டண்டர லவ்வ ஆரம்பிச்சிட்டான்

ரெண்டாம் காதல்: செபஸ்தியான் ஆட்டோகிராப் சேரன் மாதிரி இதுவர ஏகப்பட்ட பிள்ளேல காதலிச்சிருக்கான். அவன் முதல்ல காதலிச்சது ரூபாங்கிற பிள்ளய. ரூபா ஆந்திராக்காரி, கண்ணாடி போட்டு குண்டா தெலுங்குப் பட கதாநாயகி மாதிரி நெடு நெடுன்னு இருப்பா. நம்ம ஆளோ அவ தோளுக்குத் தான் இருப்பான். ரெண்டு பேருக்கும் முன்ன பின்ன பழக்கம் கெடயாது. செபஸ்தியானோட சேக்காளி காசிராசா ஒருநா ரூபாவ அவனுக்கு அறிமுகப் படுத்தி வச்சான். அறிமுகப்படுத்தி ரெண்டு நிமிசத்துல ரெண்டு பேருக்கும் காதல் வந்துருச்சு. அப்புறம் ரெண்டு பேரும் தினமும் பேசிக்கிட ஆரம்பிச்சாவ. செபஸ்தியான் அப்போ பண்ணிரண்டாங் கிளாஸ் படிச்சான், ரூபா பத்தாப்பு படிச்சா. ரெண்டு பேரும் டியூசன் போறோமின்னு வீட்ல சொல்லிட்டு தெருத் தெருவா திரிய ஆரம்பிச்சுதுக. செபஸ்தியான் கொஞ்சம் தைரியம் வந்து ரூபாவ அவ பள்ளியூடத்திலயே போய் தினமும் பாத்தான். அங்க ஆரம்பிச்சுது விணை. அங்க உள்ள சரசா டீச்சர் இதுகள பாத்துட்டு போய் ரூபாவோட அய்யா குண்டு ராவ் கிட்ட சொல்ல உடனே குண்டு ராவும் அடுத்த வாரமே வீட்ட காலி பண்ணி ஒங்கோலுக்கு போய்ட்டாரு. ஆனா செபஸ்தியான் அதுக்கெல்லாம் அசரல. ரூபா இல்லாட்டி சோபான்னு அடுத்த பிள்ளையத் தேடிப் போயிட்டான். சமீபத்துல நெல்லைல அவன பாத்தப்ப, "மக்கா டவுனுல என் கூட வேல பாக்குத அழகுமணிய சின்சியரா இலவு பண்ணுதேன். வார வெள்ளி ரெண்டு பேரும் சாலைக்குமார சாமி கோயில்ல வச்சு தாலி கட்டிட்டு, அப்புறம் தெக்கு பஜார் அந்தோனியார் கோயில்ல மோதிரம் மாத்துதோம்" அப்டின்னான். பய திருந்திட்டானேன்னு சந்தோசப் பட்டேன். ஆனா போன வாரம் கெடச்ச தகவல் என்னான்னா, செபஸ்தியானும், அழகு மணியும் தாலி கட்டப் போற நேரத்துல காதலுக்கு மரியாத பாணில வீட்டப் பத்தி ரொம்ப நெனச்சுப் பாத்து பிரிஞ்சிட்டாங்களாம்.

மூனாங் காதல்: எங்க ஏரியாவுலயே ரொம்ப அழகான பிள்ள சிவகாமி. பல பேரு தூக்கத்த கெடுத்தவ. சிவாமி எங்களோட பக்கத்து பள்ளியூடத்தில தான் படிச்சா. பள்ளியூடத்துப் பயக்கள்ல இருந்து காலேசு படிக்கிற பெரிய அண்ணன்மாரு வரைக்கும் அவ மேல பைத்தியமா அலஞ்சானுவ. அந்த நேரம் பாத்து பழனியப்பன்னு ஒரு கோமாளிப் பய அவ பக்கத்து வீட்ல குடியேறினான். சோடாப்புட்டி கண்ணாடி, எண்ணெய் வழியுத நீள கிராப்பு, ஒலக்கால் சீலக்கால் பேண்ட்டு சட்டைனு பய அமர்க்களமா இருப்பான். அவனக் கூட சேத்தா நம்ம பெர்சனாலிட்டி குறஞ்சு போயிரும்னு பயக்க யாரும் அவன பக்கத்துல சேத்துக்கிடுததே இல்ல. பய வாயத் தெறந்தாலே எதாவது உளறி தான் வைப்பான். சிவாமி வீட்டுக்கு பக்கத்து வீடுங்கதால இன்று போய் நாளை வா பாக்யராஜ் மாரி அவளோட வீட்ல உள்ளவங்களுக்கெல்லாம் ஏதாவது ஒத்தாச பண்ணி கொஞ்ச கொஞ்சமா அவ வீட்டுக்குள்ள வர போக ஆரம்பிச்சான். நம்ம மைனர் பயக்களுக்கெல்லாம் பயங்கரமா காதுல புக வந்தது. இப்படியே தினமும் அவ வீட்டுக்கு போரதும் வாரதுமா ஒரு மர்மமாவே இருந்தான் பழனி. தீடிர்னு ஒரு நாள் எல்லார் வாயிலயும் பழத்த வச்சிட்டு சிவாமிய கூட்டிட்டு எங்கேயோ ஓடிப் போயிட்டான். பிறகு ஒரு ரெண்டு வாரம் கழிச்சு அவ கழுத்தில மஞ்சக்கயிற கட்டி கூட்டிட்டு வந்தான். எல்லாரும் அதிர்ச்சில உறஞ்சி போயிட்டோம். இப்ப பழனியப்பனுக்கும் சிவாமிக்கும் ஒரு குட்டி பழனியப்பன் இருக்கான். அப்படியே அப்பன உரிச்சு வச்ச மாதிரி இன்னொரு குட்டிக் கோயான். அவனுக்கு எங்கேயோ மச்சம்ல அப்டின்னு ஒரு வயித்தெரிச்சல் காரப் பய நொந்துகிட்டான்.

அடுத்த மூனு காதல பத்தி கூடிய சீக்கிரம் சொல்லுதேன்....

Sunday, August 06, 2006

நண்பர்கள் தினம்...

வலைப் பதிவு செஞ்சுகிட்டு இருக்கிற எல்லாத் தமிழ் மக்களுக்கும் என்னோட நண்பர்கள் தின வாழ்த்துக்கள். உலகம் பூராவும் ஆகஸ்டு 6, நட்பு தினத்த கொண்டாடுதாவ. பெத்தவுககிட்ட கூட பகிர்ந்துகிடாத சில விசயங்கள நம்ம சேக்காளி கிட்ட தான் சொல்லுவோம். TTC தாத்தா நட்புக்கின்னே நாலு அதிகாரம் ஒதுக்கிருக்காருன்னா, அந்த காலத்திலயே அவரு நட்ப பத்தி அலசி ஆராஞ்சிருக்காரு.

பள்ளியூடத்துல கூட ஒன்னா படிச்சவுக கடைசி வர நண்பர்களா இருக்கிறது அபூர்வம். எங்க தாத்தா கூட திருநெல்வேலில படிச்ச இன்னும் ரெண்டு தாத்தாக்கள் சாகுத வரைக்கும் நண்பர்களா இருந்தாக. அவுக போய் சேந்துட்டாலும், அவுக மக்கமாரு இன்னும் நட்போட தான் இருக்காக. குடும்பத்தில ஏதாவது நண்ம தீமயின்னா இன்னைக்கும் வந்து கலந்துக்கிடுவாக.

ஆனா இப்ப உள்ள காலத்துல அந்த மாரி நட்பு வச்சுக்க முடியுமாங்கிறது சந்தேகம் தான். அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியான்னு கண்ணூக்கெட்டாத தூரத்துல இருந்துகிட்டு நட்பு பாராட்டுறது சிரமம் தான். ஆனாலும் மனமிருந்தா மார்க்கமுண்டு. நம்மள்ள எத்தன பேரு இன்னும் பள்ளியூட நண்பர்கள், கல்லூரித் தோழர்களோட எல்லாம் தொடர்பு வச்சிருக்கோம்? அப்படியே தொடர்பு இருந்தாலும், வேலை, கல்யாணம், குடும்பம்னு ஆனவுடனே அந்த பழய தொடர்பு எல்லாம் விட்டுப் போயிடுது. அதுலயும் சில பேரு நல்ல அந்த்ஸ்த்துக்கு வந்தப்புறம்
நாலாங்கிளாஸ்ல கூடப் படிச்சவனயெல்லாம் ஞாபகம் வச்சிக்கிடதது இல்ல.

ஆபிசு நட்பு வேற ஒரு ரகம். இப்பெல்லாம் வருசத்துக்கு ரெண்டு கம்பெணி மாறிகிட்டு இருக்கிற பயக்க, எல்லா பழய கம்பெணி ஆளுகளயும் நினைவுல வச்சுகிடதது பெரிய விசயம் தான். இப்போ ஈ-மெயில், சாட் எல்லாம் இருக்கிறதால, ஒருத்தர ஒருத்தர் தொடர்பு கொள்ளுதது ஒன்னும் பெரிய விசயமில்ல. கூட வேல பாத்த பிள்ளேல ஞாபகம் வச்சுக்கிடுத அளவுக்கு, பயக்கள நாம ஞாபகம் வச்சுக்கிடுதது கெடயாது

தோழனோ, தோழியோ வாழ்க்கத் துணையா அமயுதது அதிர்ஷ்டம் தான். நான் படிச்ச பள்ளியூடம், காலேஜ் எல்லாம் பயக்க மட்டும் படிக்கிற எடமா போச்சு. அதனால ஒரு நல்ல தோழி எனக்கு கெடைக்கதுக்கு வாய்ப்பே இல்லாம போச்சு. நான் மட்டும் இல்ல, திருநெல்வேலில இதே மாரி நெறய துரதிர்ஷ்டசாலிக உண்டு. ஜான்ஸ், சேவியர்ஸ், MDT, சதக்னு பயக்களுக்கு தனியாவும், சாராள்தக்கர், சாரதா, ராணி அண்ணா, ரோஸ்மேரின்னு பிள்ளேளுக்குத் தனியாவும் இன்னும் நெல்லையில அந்த சோகம் தொடருது. எனக்கெல்லாம் சென்னை வருத வரைக்கும் பிள்ளேள் கிட்ட பேசுததே குதிரக் கொம்பா இருந்தது.

கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு தோழிங்கிற பேச்ச எடுக்கவே பயமா இருக்கு. நான் குத்துக்கல்லு மாரி இருக்குதப்போ உங்களுக்கு இன்னொரு ப்பிராண்டு கேக்குதான்னு பாத்திர பண்டமெல்லாம் பறக்குததால என் ஆச நிராசயாவே போச்சு.

ஆகயினால மக்களே இந்த நட்பு தினத்துலயாவது உங்க அங்காளி, பங்காளி, சேக்காளி, கேர்ள் ப்பிராண்டு எல்லாத்தோடயும் பேசுங்க, இல்லாட்டி வாழ்த்தாவது அனுப்புங்க...